மறுக்கப் பழகு

எல்லோருடைய
விருப்பங்களுக்கும்
வளைந்து கொடுத்துக் கொண்டே போனால்,
ஒருநாள்
உன் விருப்பம் என்ன என்பதையே
நீ மறந்துவிடுவாய்.

ஆதலால்
தவறென்று தெரிந்ததை
தயக்கமின்றி
மறுக்கப் பழகு…

உன் அமைதியை
களவாடும் உறவுகளை மறுத்துவிடு.
உன் மதிப்பைக்
குறைக்கும் வார்த்தைகளை மறுத்துவிடு.
உன்னைத் தேடாதவர்களை
நீயும் தேடாதே.

உன்னைப் புரிந்துகொள்ள
விரும்பாதவர்களிடம்
உன்னை விளக்கிக் கொண்டிருக்காதே.

உன் வலியை
பலவீனமாகப் பார்க்கும் கண்களுக்கு
உன் காயங்களை நிரூபிக்காதே.

ஒவ்வொரு முறையும்
“It’s okay”என்று சொல்லி
மறைத்து வைத்த வலிகளிடம்
ஒருநாள் திரும்பிச் சென்று சொல்
“That is not okay.”

எல்லோருக்கும்
நல்லவளாக இருப்பதற்காக
உனக்கே அநியாயம் செய்துவிடாதே.

உன் மனசாட்சிக்கு எதிராக
வாழும் வாழ்க்கை
யாரையும் திருப்திப்படுத்தாது.

சில கதவுகளை
மூடுவது கொடுமையல்ல
அது சுயமரியாதை.

சில மனிதர்களை
விட்டுச் செல்வது தோல்வியல்ல
அது தைரியம்.

சில அழைப்புகளுக்கு
பதில் சொல்லாமல் இருப்பதும்
ஒரு பதில்தான்.

நினைவில் கொள்…
“இல்லை” என்பது
ஒரு சிறிய வார்த்தை.
ஆனால் அதற்குள்
உன் எல்லையும்,
மரியாதையும்,
சுதந்திரமும் இருக்கிறது.

உன் எல்லையை
மீறி வருபவர்களிடம்
மீண்டும் மீண்டும்
உன்னை விளக்காதே.
ஒருமுறை சொல்.
மறுமுறை உறுதியாகச் சொல்.
அதற்குப் பிறகு
மௌனமாக விலகிச் செல்.

மன்னி…
ஆனால்
மீண்டும் அதே காயத்திற்குள்
உன்னைத் தள்ளாதே.

அன்பு கொடு.
மரியாதை கொடு.
ஆனால்
உன்னை இழந்து அல்ல.

உனக்குப் பிடிக்காததை
மறுப்பதற்கு
எப்போதும் ஒரு காரணம்
தேவைப்படாது.
“எனக்கு வேண்டாம்”
என்பதே சில நேரங்களில்
போதுமான பதில்.

எல்லோருக்கும் பிடித்தவளாக
இருப்பதைவிட,
உனக்கே பிடித்தவளாக
இருக்கக் கற்றுக்கொள்.

உன் மனம்
“போதும்” என்று சொல்லும் இடத்தில்
நின்றுவிடு.
ஏனெனில்
உன்னைத் தொலைத்து
யாரையாவது பெற்றுவிடுவது
வெற்றி அல்ல.
உன்னை இழக்காமல்
உன்னைத் தேர்ந்தெடுப்பதுதான்
உண்மையான வெற்றி.

அதனால்
அன்பை மறுக்காதே.
நல்ல மனிதர்களை மறுக்காதே.
உறவுகளை மறுக்காதே.
ஆனால்
உன்னை அழிக்கும் எதற்கும்
உன் வாழ்க்கையில்
இடம் கொடுக்காதே.

ஒருநாள் பின்னோக்கிப் பார்க்கும்போது
நீ உன்னையே பார்த்து
பெருமையாகச் சொல்ல வேண்டும்
“எல்லோரையும் மகிழ்விக்க முடியவில்லை…
ஆனால் இந்த முறை
என்னை மட்டும்
கைவிடவில்லை.” 

அதற்காகவேனும் மறுக்கப்பழகு! 

Comments

Popular posts from this blog

வலையுலகும் எனது நூறாவது பதிவும்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு

ஹைக்கூ கவிதைகள்