நினைவும் வலியும்
வேகமாய் சுழலும் பூமிப்பந்தில்
பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்கின்றோம்
அத்தனை ஓட்டத்திலும்,
நம் மனதில் ஆழப் பதிந்ததென்னவோ
இரு நினைவுகள் தான்.
ஒன்று, இன்ப நிகழ்வுகள்;
மற்றொன்று, துயரத்தின் வலிகள்.
காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது,
நாட்கள் நகர்கின்றன,
நினைவுகள் மங்கிவிடும் என
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்...
ஆனால்,
சில இன்பங்கள் மட்டும்
இதயத்தின் ஓரத்தில்
மீண்டும் மீண்டும் மலர்ந்து,
மெலிதாய் வருடிவிட்டுச்செல்லும்.
அவ்வாறே,
சில வலிகள் மட்டும்
மௌனத்தின் இருளில்
மீண்டும் மீண்டும் உரசி
முள்ளாய் குத்திவிட்டுச்செல்லும்.
ஒரு பார்வை,
ஒரு புன்னகை,
ஒரு அன்பான வார்த்தை,
ஒரு அணைப்பு—
காலம் கடந்த பின்னும்
மனதை வருடிச் செல்லும்.
அதேபோல்,
ஒரு காயம்,
ஒரு பிரிவு,
ஒரு ஏமாற்றம்,
ஒரு கண்ணீர் துளி—
ஆண்டுகள் கடந்த பின்னும்
நெஞ்சை விட்டு அகலாமல்
வலித்துக்கொண்டே இருக்கும்.
எத்தனை ஆழமான
உணர்வலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்
அந்த நிகழ்வுகள்...
அதனால்தானோ,
காலம் அவற்றைக் கடந்து சென்றாலும்
நம் மனம் மட்டும்
அவற்றைக் கடந்து செல்வதில்லை.
இன்பமும் துயரமும்
வாழ்வின் இரண்டு கரைகள்;
அவற்றுக்கிடையே ஓடும்
நம் நினைவுகளின் நதி மட்டும்
என்றும் வற்றுவதில்லை...
ஏனெனில்,
மனதைத் தொட்டவை மறைவதில்லை,
காலம் கடந்தாலும்
நினைவாகவும்...
சில நேரம் வலியாகவும்...
நம்முள் வாழ்ந்துகொண்டே இருக்கும்!
Samyu❣️
i3 planet 🌎
Comments