காலம் கடந்தும் காதல்
ஏனோ என் காதல் மீது
அத்தனை பிரியம் எனக்கு -அது
இனம்புரியாத உணர்வை
தந்துவிட்டு போகும்
வெளியில் இருந்து பார்க்க
எல்லாமே நன்றாக தான் தோன்றும்
ஒருவருடனான ஆழ்ந்த உரையாடல்
அதன் பின்னான நீண்ட மௌனம்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஏதோ ஒரு வலி...
ஒரு ஏக்கம்...
ஒரு இழப்பு...
இருக்கத்தான் செய்யும்
என்பதை புரியவைக்கும்
எல்லா வாழ்வும் இனிமையாய் மட்டும் இருந்திடாது
அப்படி இருந்தால் சில அற்புதங்களின்
அருமை புரிந்திடாது
சில இழப்புக்கள் ஏன் நிகழ்ந்ததென்று
கிரகித்து முடிப்பதற்குள் எல்லாம்
முடிந்தே போய்விடும் - முழுதாய்
தொலைந்தே போய்விடும்
இங்கு யார் யாரை குற்றம் சொல்ல...
வாழப்போவதை பற்றி பேசவே
நேரம் கிட்டாத போது
பிரிவைப்பற்றி சிந்தித்திருக்கவா போகிறோம்
காலம் நம் காதலையும்
விட்டு வைக்கவில்லை
காலம் கடத்தியே
காதலை கொன்றுவிட்டது
இருந்தும்,
ஏனோ என் காதல் மீது
அத்தனை பிரியம் எனக்கு -அது
இனம்புரியாத உணர்வை
தந்துவிட்டு போகும்!
Comments