வழி பிறக்குமா.... வலி பிறக்குமா....?

தைப்பிறந்தால் வழி பிறக்கும்
மூத்தோரின் முன்னுரைகள்
தையினிலே தலை வெடிக்கும்
தமிழனின் நிலை இது தான்

ஏழையின் கையது தான்
கடவுளென தினம் துதிப்பர்
ஆட்சியிலே அமர்ந்த பின்பு
சீ போனு தான் வதைப்பர்

ஒரே நாடு ஒரே வீடு
ஊரெல்லாம் மைக் பிடிப்பு
உள்ள வீடும் சுருட்டிக் கொண்டு
உலகத்திலே பெரும் நடிப்பு

கைப் பிடித்து மை இடுவர்
கண நேரம் பேசிடுவர்
கால் பிடிக்க வைத்திடுவர்
அடிமை இந்த தமிழனென்று

நாட்டின் குடிமகன்
குடிகார மகனாக - நாள் தோறும்
ஊற்றிடுவர் வஞ்ச புத்தியோடே
நஞ்சை
மருந்தாக

பட்டு நொந்ததிலே பலர்.......

தமிழரின் எதிர்கால விற்பனைக்கு
தாமே தயாராக - இன்று
சிரம் தாழ்த்தி பழகி விட்டார்
சில காலம் வாழ ஆசை

நாளெல்லாம் துடித்திடுவர்
நல்லவன் ஜெயிக்கவென - ஏனோ
நாளை உழைக்காட்டா
நம் வீட்டு அடுப்பணையும்

தேர்ந்தெடுக்க உரிமையுண்டு
தெளிவாக கூறிடுவர்
தெரிந்த பின்னே சொல்லிடுவர்
தெரியாது உன்னை என்று

கோழியிடம் தப்பிக்க
காகத்திடம் சென்ற புழு
யாரிடம் சென்றாலென்ன
புழுவின் கதை முடிந்த கதை

நிறத்தில் மட்டும் மாற்றமுண்டு
குணத்திலல்ல என்றுணர
புழுவிற்கு நேரமில்லை
புதைந்தது அதன் வாழ்வு

என்றாலும் மாற்றமில்லை
மறுபடியும் சிசு புழு - இம்முறை
மாற்றமாய் போனது
கோழி தான் வேண்டுமென்று

தொடருதிந்த தொடர் கதையும்
தொன்று தொட்டு இன்று வரை
மிச்சமில்லை மீதமில்லை தமிழன்
நெஞ்சினிலே வஞ்சமும் தான்!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

ஹைக்கூ கவிதைகள்