இன்றைப்போல் அன்றிருக்கவில்லை

நம் கண்கள் முதன் முதலாய்
நம் உருவங்களை முத்தமிட்டுக் கொண்டன
இதழில் ஒரு சிறு புன்னகை
இளையோடி மறைந்தது
நீ யாரென எனக்கோ
நான் யாரென உனக்கோ
தெரிந்திருக்கவில்லை
நாம் இருவரும் இரு துருவங்கள்
இணைத்திருந்தது தாய் மொழி
நம்மை நம் சந்திப்பு எதுவும் செய்யவில்லை
நான் நானாகவும் நீ நீயாகவும்
இருந்தோம் பிரிந்தோம்
இடைக்கிடை இணையவழி இரண்டொரு வார்த்தைகள்
இதயம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது
இடை நிறுத்தம் செய்யாமல்
என்னிடம் என்னதும்
உன்னிடம் உன்னதும்

இரண்டாவது சந்திப்பு
உன் வருகைக்காய் ஏங்கவில்லை மனது
ஏதோ பேசிக் கொண்டோம்
எல்லோரையும் போல
அதே பார்வை அதே புன்னகை
அகன்றது அன்றோடு உன் நினைவு

அடுத்தடுத்தும் நம் கணனிகள்
கைத்தொட்டு போயின
இதயம் தூரத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தது
நம் இதயங்களுக்கிடைப்பட்ட தூரம் அப்படியே இருந்தது
ஏதோ நான் பேச எதையோ நீ பேச
எங்கோ நின்ற உன்னில் எதுவும் தோன்றவில்லை
எதற்காகவோ முதலில் நானே அலை(ழை)த்தேன்
துண்டித்தேன் தொடர்பை
எட்டவே நின்றாய் நீ
இதனிடை பேச்சுக்களில் சொல்லியும் போனாய்
பெண் எப்படி இருக்க வேண்டுமென
முதலாய் உன்னில் ஒரு மதிப்பு
அலைபேசியும் அடிக்கடி ஒளித்து ஒழிந்தது
பேசிக்கொண்டோமே தவிர
பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை
நம் உறவு தொடர்ந்தது

இடையே மூன்றாவது சந்திப்பும் வந்தது
அன்றும் நாம் பேசிக்கொள்ளவில்லை
அதே சந்திப்பு அதே புன்னகை
விடைபெற்று சென்ற நீ
விளகியதுமே தொடர்பு கொண்டாய்
பரிசொன்றும் தந்தாய்
மறுக்க தோன்றவில்லை
மறு நிமிடம் நீ செல்ல
நானும் விரைந்தேன்
பரிசினை ஏற்றது சரியா தவறா
என்னவனின் ஒப்புதலோடு
குழப்பத்தோடே பிரித்தேன்
என்றோ விளையாட்டாய் நான் கேட்டிருந்த
அதே கரடி பொம்மை
சத்தியமாய் சொல்ல முடியவில்லை
அக்கணத்தின் களிப்பை
ஆனால் நமக்குள் எதுவுமே இருக்கவில்லை
இடைவெளி குறைந்திருந்தது
இருந்தும் இடைவெளியோடே தொடர்ந்து
அலைபேசியே உறவாடியது
அத்தனையும் இரகசியங்கள்
என்னது உனக்கும்
உன்னது எனக்கும்
பரிமாற்றம் பெற்றது
நம் அந்தரங்கங்கள் அம்பலமானது
நாட்கள் நகர்ந்தன நம்மையும் சேர்த்துக்கொண்டே
ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு
இல்லையென்னாத உன் மனது
ஏற்றுக் கொள்ளும் உன் தயவு
எல்லாமே பிடித்துப் போக
இதயம் தொட்டாய் நீ
இன்று இரவு பகலாய் உன் நினைவு
இடைவிடாமல் உன் தொடர்பு
ஒன்றானது நம் உணர்வு
இன்றானது நம் உறவு

இருந்தும் நமக்கிடையில் எதுவுமில்லை
அன்பைத் தவிர

Comments

//இருந்தும் நமக்கிடையில் எதுவுமில்லை
அன்பைத் தவிர //

கலக்கல்...
என்னாது என்னவனினின் ஒப்புதலொடு மற்றவன் தந்தத பிரிச்சீங்களா? உங்களவன் சரியான அப்பாவியா இருப்பான் போலிருக்கிறதே?நடத்துங்க நடஙத்துங்க..

ஒரு சின்ன அட்வைசு: அந்தரங்கம் அம்பலமானது எண்டு போட்டிருக்கீங்க.. அதையெல்லாம் அந்தரத்தில கட்டி தூக்கப்படாது.. நமக்குள்ளயே வச்சிருக்கணும்.. :P

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு